சென்னை: ஆளுநர் தனது உரையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் எரிபொருட்களில் எத்தனால் சேர்த்தல், பசுமை ஹைட்ரஜன், மின் வாகனங்களுக்கான கொள்கைகள் ஆகியவை மிக விரைவில் வெளியிடப்படும். சென்னை தவிர பிற நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திட உகந்த சூழலை உருவாக்க, ஏழு இடங்களில் மினி டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தின் 3வது டைட்டல் பூங்கா மதுரையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். கோவிட் பெருந்தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பெருமளவில் மீண்டு வந்துள்ளன. ரூ.2,344 கோடி மதிப்புள்ள, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயதொழில் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, நடப்பு ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கென 5 புதிய தொழிற்பேட்டைகளை தமிழக அரசு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.